மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். புனேயில் உள்ள எரவாட சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2008 ல் மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் பலியாகினர். மும்பையில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் கசாப் மட்டுமே பிடிபட்டார். ரயில் நிலையம் , தாஜ் ஓட்டலில் நடந்த தாக்குதலில் ஒன்பது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கசாப்பின் கடைசி நிமிடம்: தூக்கு தண்டனை நிறைவேற்றும் முன் கசாப்பிடம் கடைசி ஆசை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. தமக்கு ஆசை எதுவும் இல்லை என்று கசாப் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க வரவேற்பு: காலம் கடந்தாலும் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பா.ஜ.க வரவேற்பு தெரிவித்துள்ளது. கசாப்பின் தூக்கு தண்டனை தீவிரவாதிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை என பாரதிய ஜனதா துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
ஷிண்டே விளக்கம்: கசாபை தூக்கிலிடுவது தொடர்பாக பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் கசாப்பின் உடலை பெற பாகிஸ்தான் அரசு இதுவரை கோரவில்லை எனவும் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கசாப்பின் உடல் புனேயில் அடக்கம்: தூக்கிலிடப்பட்ட கசாப்பின் உடல் புனே எரவாடா சிறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கசாப்பின் உடலை பெற பாகிஸ்தான் அரசு முன்வராததால் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது என மகாராஷ்டிர முதல்வர் பிருத்திவிராஜ் சவான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தூக்கிலிடுவதற்கான தேதியை நீதிபதி தான் முடிவு செய்தார் எனவும் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment
thanks for u r comments