தமிழ்நாட்டில் நடக்கும் செய்தி தொலைக்காட்சி பெருக்கத்திற்கு புதிய தலைமுறை
செய்தி தொலைக்காட்சியின் வெற்றிதான் காரணம் என்று சொன்னால் தற்புகழ்ச்சி
ஆகாது. தமிழ் நாட்டில் செய்தியாளர்களுக்கு முதலில் முகம் கொடுத்த
தொலைக்காட்சி, புதிய தலைமுறைதான்.அதுவரைக்கும் தொலைக்காட்சி செய்தியாளர்கள்
அடையாளம் இல்லாதவர்களாக இருந்தார்கள். இதே முன்மாதிரியை கேப்டன் நியூஸ்
முதல் ஜி டிவி வரை இன்றைக்குக் கடைபிடிக்கிறார்கள். புதியவர்கள்
மட்டுமல்ல,பழைய செய்தி தொலைக்காட்சிகள் கூட புதிய தலைமுறை வந்த பிறகுதான்,
தங்கள் செய்தியாளர்களின் முகங்களை திரைகளில் காட்ட ஆரம்பித்தார்கள்.
இன்றைக்கு பத்துக்கும் மேற்பட்ட தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளில்
செய்தியாளர்களின் நேரலைகளையும், ஒளிப்பதிவுகளையும் நாம் காண முடிகிறது.
இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, புதிய தலைமுறை தொலைக்காட்சி; மற்றொன்று,
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 2011ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்.பதினெட்டு
வருடங்களுக்கு மேலாக ஒரேயொரு தொலைக்காட்சிக் குழுமம், தமிழ்நாட்டு
சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.எத்தனை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும்
தொலைக்காட்சி ஒளிபரப்பு வினியோகத்தைக் கட்டுப்படுத்தியதன் மூலம், தங்கள்
சந்தை தலைமையை தக்கவைத்துக் கொண்டார்கள்.
செப்டம்பர் 2011ல் ஜெயலலிதா தலைமையிலான அரசு,அரசு கேபிள் டிவி நிறுவனத்தை
செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக சந்தை முதல்வராக இருந்த தொலைக்காட்சிக்
குழுமம் சந்தை தலைமையை புதிய தலைமுறையிடம் பறிகொடுத்தது. கேபிள் தொழிலின்
அரசுடமையாக்கம் போட்டிக்கு வாசல் திறந்துவிட்டது; ஊடக ஜனநாயகத்தின்
கதவுகளைத் திறந்துவிட்டது இந்த ஆட்சி மாற்றம் என்பதை மறுப்பதற்கில்லை.
குறிப்பிட்ட அரசியல் பிரிவுகளின் பலத்தை தொழில் வளர்ச்சிக்குப்
பயன்படுத்துவதும், தேர்தல் சமயத்தில் ஊடக பலத்தை அதே அரசியல் பிரிவுகளின்
வெற்றிக்குப்பயன்படுத்துவதும் தமிழ் நாட்டில் வாடிக்கையாகிவிட்டிருந்தது.
இப்போது, செய்தியின் இலக்கணம் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது. மக்கள்
மையப்பட்ட செய்திகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
கிராமங்களின் அழகிற்கும் கிராமத்துத் தாய்மார்களின் அழுகுரலுக்கும் புதிய
தளம் படைக்கப்பட்டிருக்கிறது. மண் வாசனை கலந்த செய்தியாளர்கள் சமூக
கரிசனத்தோடு மக்களுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மண்ணின்
பிரச்சினைகளுக்கும் மக்களின் ஆதங்கத்திற்கும்வடிகால் கிடைத்திருக்கிறது.
செய்திகளைப் பற்றிய புரிதல் மேம்பட்டிருக்கிறது; செய்திகளின் மூலம்
அதிகாரத்திடம் உண்மையைப் பேச முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
புதிய தலைமுறையின் வரவும் சந்தையில் அதன் திறம் நிறைந்த செயல்பாடும் பல
புதிய செய்தித் தொலைக்காட்சிகள் சந்தையில் கால்பதிக்க காரணமாக இருக்கின்றன.
மாறியுள்ள இந்தப் போட்டிச் சூழல், ஆயிரமாயிரம் புதிய கருத்துக்களுக்கும்
எண்ணங்களுக்கும் இடமளிக்கிறது; சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருந்த,
ஓரங்கட்டப்பட்டிருந்த சாதாரண மக்களுக்கு புதிய குரல் கிடைத்துள்ளது; புதிய
உரையாடல்களுக்கு களம் அமைந்திருக்கிறது. சின்னச் சின்னதாய் ஜனநாயகம்
செழுமைப்பட்டிருக்கிறது. இதனால் உருவாகியுள்ள கருத்து வெளிப்பாட்டு
சுதந்திரத்தைப் பேணிக் காப்பதும், அதை தொடர்ந்து முன்னெடுத்துச்
செல்வதும்தான் தமிழக ஊடகவியலாளர்கள் முன்பிருக்கும் மிகப்பெரிய சவால்.
www.rpbrothers.in
No comments:
Post a Comment
thanks for u r comments